Archives: ஆகஸ்ட் 2022

அறிவு காயப்படுத்தும்போது

கிராண்ட் கேன்யன் வழியாக, இருபத்தைந்து நாட்கள் மிதவைப் படகு பயணத்திற்கு பிறகு, சாக் எல்டரும் அவரது நண்பர்களும் கரை வந்துசேர்ந்தனர். அவர்களின் படகுகளை மீட்டெடுக்க வந்த நபர் கோவிட்-19 வைரஸ் பற்றி அவர்களிடம் கூறினார். அவர்கள் அதை நம்பவில்லை, அவர் கேலி செய்கிறார் என்று நினைத்தார்கள். ஆனால் அவர்கள் பள்ளத்தாக்கை விட்டு வெளியேறியதும் அவர்களின் தொலைபேசிகள் பெற்றோரின் அவசர செய்திகளுடன் வந்து சேர்ந்தன. சாக்கும் அவனது நண்பர்களும் திகைத்தனர். அவர்கள் மீண்டும் ஆற்று பயணத்திற்கு திரும்பிப்போய் தற்போதைய தொற்று பிரச்சனையிலிருந்து விடுபட எண்ணினர்.

பாவ உலகத்தில், அறிவானது வேதனையை கூட்டக்கூடியதாயிருக்கிறது. பிரசங்கி புத்தகத்தில் ஞானி, “அதிக ஞானத்திலே அதிக சலிப்புண்டு; அறிவுபெருத்தவன் நோவுபெருத்தவன்” (1:18) என்று குறிப்பிடுகிறார். குழந்தையின் அறியாமையைக் கண்டு பொறாமை கொள்ளாதவர் யார்? காரணம் இனவெறி, வன்முறை மற்றும் புற்றுநோய் பற்றி குழந்தைகளுக்கு ஒன்றும் தெரியாது. நாம் வளர்ந்து, நம்முடைய பலவீனங்களையும் தீய எண்ணங்களையும் பகுத்தறிவதற்கு முன்பு மகிழ்ச்சியாக இருக்கவில்லையா?

எங்கள் மாமா ஏன் அதிகமாக குடிக்கிறார் அல்லது எங்கள் பெற்றோரின் விவாகரத்துக்கு என்ன காரணம்? போன்ற குடும்ப இரகசியங்களை அறிவதற்கு முன்பு நாம் மகிழ்ச்சியாய் இருக்கவில்லையா?

அறிவின் வேதனை விரும்பத்தக்கதல்ல. ஆனால் அவற்றை சகித்துக்கொள்ளவும், அதில் வளரவும் நம்மை ஊக்குவிக்கும், ஒரு உயர்ந்த அறிவு இருக்கிறது. இயேசு என்னும் தேவனுடைய வார்த்தையே நம்முடைய

இருளில் பிரகாசிப்பிக்கும் ஒளி (யோவான் 1:1-5). “அவரே தேவனால் நமக்கு ஞானமும் நீதியும் பரிசுத்தமும் மீட்புமானார்” (1 கொரிந்தியர் 1:30). இயேசுவிடம் சரணடைவதற்கு உங்களுடைய வேதனையே ஒரு காரணம். அவர் உங்களை அறிந்திருக்கிறார், உங்களை பாதுகாக்கிறார்.

விளக்கை எரியவிடுங்கள்

ஓட்டல் வணிகத்தின் ஒரு சிறிய கட்டிடம் இருந்தது. அது ஒரு இரவு நேரம். அந்தக் கட்டிடத்தை சுற்றி எதுவும் இல்லை. அந்தக் கட்டிடத்தின் வராந்தா கதவின் அருகில் இருந்த விளக்கிலிருந்து மட்டும் சிறிய வெளிச்சம் வந்தது. பயணிகள் படிகளில் ஏறிச்சென்று கட்டிடத்திற்குள் நுழைவதற்கு அந்த ஒளி போதுமானதாயிருந்தது. அங்கே “உங்களுக்காக நாங்கள் விளக்கை எரிய விடுகிறோம் & quot; என்னும் வாசகம் எழுதப்பட்டிருந்தது. சோர்வோடு வரும் பயணிகள் தங்கி இளைப்பாறுவதற்கு அந்த விளக்கு வரவேற்படையாளமாய் அமைந்தது.

இயேசுவை விசுவாசிக்கிறவர்கள் அந்த வரவேற்பு விளக்கைப் போன்றவர்கள் என்று இயேசு சொல்லுகிறார். அவர் தன்னை பின்பற்றுபவர்களைப் பார்த்து, “நீங்கள் உலகத்துக்கு வெளிச்சமாயிருக்கிறீர்கள்; மலையின்மேல் இருக்கிற பட்டணம் மறைந்திருக்கமாட்டாது” (மத்தேயு 5:14) என்றார். விசுவாசிகளாகிய நாமும் இருள் சூழ்ந்த உலகத்திற்கு ஒளியாக திகழ்கிறோம்.

மேலும் அவர் “மனுஷர் உங்கள் நற்கிரியைகளைக் கண்டு, பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதாவை மகிமைப்படுத்தும்படி” (வச. 16) நம்முடைய வெளிச்சத்தை பிரகாசிக்கும்படிக்கு கூறுகிறார். நம்முடைய விளக்கை அணையாமல் எரியச் செய்தால், நாம் பலரை நம்மிடமாய் வரவேற்று, மெய்யான ஜீவ ஒளியான கிறிஸ்துவை (யோவான் 8:12) அறிந்துகொள்ளும்படி செய்யலாம். சோர்ந்துபோன, இருள் சூழ்ந்த உலகத்தில் அவருடைய விளக்கு அணையாமல் எரிகிறது.

உங்கள் விளக்கு எரிந்துகொண்டிருக்கிறதா? இயேசு உங்கள் மூலமாய் விளக்கை பிரகாசிக்கச்செய்யும்போது, மற்றவர்கள் அதைப் பார்த்து அவ்வெளிச்சத்தைத் தங்களிலும் பிரகாசிக்கச்செய்வார்கள்.

காலத்தின் விதைகள்

1879 ஆம் ஆண்டில் வில்லியம் பீலுடைய செய்கைகள் பார்ப்பவர்களுக்கு முட்டாள்தனமாய் தெரிந்தது. ஏனெனில் தாவரவியல் பேராசிரியரான அவர் இருபது பாட்டில்களில் விதைகளை நிரப்பி, அதை மண்ணில் புதைத்து வைத்தார். ஒரு விதையின் நம்பகத்தன்மையை பரிசோதிக்கும் பீலின் இந்த முயற்சியானது நூற்றாண்டுகள் நீடிக்கக்கூடியது என்பது அவர்களுக்குத் தெரியாது. ஒவ்வொரு இருபது வருடங்களும் ஒரு பாட்டிலை தோண்டியெடுத்து அது முளைத்திருக்கிறதா என்று பரிசோதிக்கவேண்டும்.

விதைக்கிறதைக் குறித்து இயேசு அநேக போதனைகளை செய்திருக்கிறார். விதைக்கிறதை கர்த்தருடைய வார்த்தையை பறைசாற்றுவதோடு ஒப்பிடுகிறார் (மாற்கு 4:15). சில விதைகளை சாத்தான் கெடுத்துப்போடுகிறான்; சில விதைகள் வேரூன்றுவதில்லை; சில விதைகள் முள்ளுகளுக்கிடையே சிக்கி வளராமல் போய்விடுகிறது (வச. 15-19). நாம் சுவிசேஷத்தை பிரசங்கிக்கும் போது, எந்த விதை பலன்  கொடுக்கும் என்பது நமக்குத் தெரியாது. நம்முடைய வேலை விதைப்பது, அதாவது, சுவிசேஷத்தைப் பிரசங்கிப்பது: “உலகமெங்கும் போய், சர்வ சிருஷ்டிக்கும் சுவிசேஷத்தைப் பிரசங்கியுங்கள்” (16:15).

2021ஆம் ஆண்டு, பீலின் மற்றுமொரு பாட்டில் தோண்டி எடுக்கப்பட்டது. ஆராய்ச்சியாளர்களால் நடத்தப்பட்ட ஆய்வில், 142 ஆண்டுகளுக்கு மேலாக விதைகள் உயிர்பிழைத்திருக்கிறது கண்டறியப்பட்டது. நம்முடைய விசுவாசத்தை மற்றவர்களோடு பகிர்ந்துகொள்ளும்படிக்கு தேவன் நம் மூலமாய் கிரியை செய்தால், நாம் பகிர்ந்துகொள்ளும் வார்த்தை எப்போது வேரூன்றும் என்று நமக்குத் தெரியாது. ஆனால் நம்முடைய நற்செய்தி விதையானது, ஒரு நாள் நிச்சயமாய் ஏற்றுக்கொள்ளப்பட்டு, “ஒன்று முப்பதும் ஒன்று அறுபதும் ஒன்று நூறுமாக” (4:20) பலன் கொடுக்கும்.

தேவனிடம் கட்டுப்பாட்டை ஒப்படைத்தல்

சமையலறை மேடையில் பொருந்தக்கூடிய அளவிற்கு ஒரு ஆலமரத்தை கற்பனை செய்து பாருங்கள். போன்சாய் என்ற மரம் அப்படித்தான், காட்டில் நீங்கள் பார்க்கும் பெரிய ஆலமரத்தின் மிகச்சிறிய உருவமே இந்த போன்சாய் மரம். பெரிய மரத்திற்கும் இந்த போன்சாய் மரத்திற்கும் இடையே எந்த மரபணு வித்தியாசமும் கிடையாது. அதை நட்டு வைத்திருக்கிற தொட்டியின் அளவினாலும், அதின் வேர் அடிக்கடி  சுத்திகரிக்கப்படுவதினாலும் அதின் வளர்ச்சி கட்டுப்படுத்தப்பட்டு சிறியதாகவே இருக்கிறது.

இந்த போன்சாய் மரங்கள் அழகாய் அலங்காரமாய் தெரிந்தாலும், அது கட்டுப்பாட்டை உருவகப்படுத்துகிறது. மரங்கள் அதின் சுற்றுப்புற சூழலுக்கு ஏற்றவாறு வளர்ச்சியடைந்தாலும், அவற்றை வளரச் செய்வது தேவனே.

தேவன் எசேக்கியேல் தீர்க்கதரிசியிடத்தில், “கர்த்தராகிய நான் உயர்ந்த விருட்சத்தைத் தாழ்த்தி, தாழ்ந்த விருட்சத்தை உயர்த்தினேன்” (எசேக்கியேல் 17:24) என்று பேசுகிறார். பாபிலோனிய சிறையிருப்பை அனுமதிப்பதின் மூலம் இஸ்ரவேல் தேசத்தை “வேறோடு பிடுங்கும்” எதிர்காலத்தைக் குறித்து தேவன் முன்னறிவிக்கிறார். ஆகிலும் தேவன் இஸ்ரவேலில் கனி தரக்கூடிய ஒரு புதிய விருட்சத்தை ஓங்கி வளரச்செய்வார்; அதின் நிழலில் “சகலவிதப்பட்சி ஜாதிகளும்” வந்து அடைக்கலம் தேடும் (வச. 23).

சம்பவிக்கப்போகிற நிகழ்வுகள் அனைத்தும் கட்டுப்பாட்டை மீறியதாக தென்பட்டாலும், தேவன் அதை கட்டுக்குள் வைத்திருந்தார். இந்த உலகம், நம்முடைய சூழ்நிலைகளால், கடின உழைப்பின் மூலம் நாமே கட்டுப்படுத்த முடியும் என சொல்லுகிறது. ஆனால் வளரச்செய்யும் தேவனுடைய கட்டுப்பாட்டுக்குள் இருக்கும்போதே, மெய்யான சமாதானத்தைப் பெற்றுக்கொள்ள முடியும்.

தொடர்புடைய தலைப்புகள்

> odb

அன்புக்காக தாகம்

சிறுவயதில் கோடை விடுமுறையில் வேலூரில் உள்ள கோடைக்கால வேதாகம பள்ளிக்கு (விபிஎஸ்) சென்று வந்தேன். வெப்பநிலை சுமார் 45 டிகிரி சென்டிகிரேட் ஆக இருக்கும். வானத்தில் மேகமோ, மரங்களில் இலையோ, தென்றல் வீசும் அறிகுறியோ இருக்காது. கொதிக்கும் வெயிலுக்கு இதமாக எங்களுக்கு இருந்த ஒரே நிவாரணம், எங்கள் புட்டிகளில் உள்ள தண்ணீரும் தன்னார்வலர்கள் வாளிகளில் கொண்டு வந்த பழச்சாறுகள் மட்டுமே. பழச்சாறு நிறைந்த ஒரு குவளை படியளப்பிற்கு நாங்கள் எங்கள் கோப்பைகளுடன் வரிசையில் நிற்போம். எவ்வளவு மெதுவாகக் குடிப்போம்! ஆயினும்கூட, எங்கள் கோப்பைகள் வறண்டு போகும், மேலும் நாங்கள் அதிகம் பெறத் தவிப்போம், அரிதாகவே இரண்டாவது முறையும் கிடைக்கும்.

வறண்டு போகத் தக்கதான கோடையில் திரவங்களுக்கான நமது தாகத்தைப் போலவே, பாழான அன்பற்ற உலகில் நாம் அனைவரும் அன்பிற்காகத் தாகம் கொள்கிறோம். நாம் பல்வேறு இடங்களில் அன்பைத் தேடுகிறோம், மேலும் அது பெரும்பாலும் அளந்து போடும்படிக்கு வறண்டு கிடக்கிறது அல்லது நிபந்தனைக்குட்பட்டு விலைகொடுத்து வாங்க வேண்டும் என்பதாகக் காண்கிறோம். ஆனால் ஒருபோதும் வறண்டு போகாத "ஜீவத்தண்ணீரின்" மூல ஆதாரம் இருப்பதாக வேதாகம நமக்குக் கற்பிக்கிறது (யோவான் 4:13-14). ஜீவத் தண்ணீர் பரிசுத்த ஆவியானவரைக் குறிக்கிறது (யோவான் 7:39). அப்போஸ்தலனாகிய பவுல் பரிசுத்த ஆவியின் மூலம் "தேவ அன்பு நம்முடைய இருதயங்களில் ஊற்றப்பட்டிருக்கிற(தாக)" (ரோமர் 5:5) நமக்குக் கூறுகிறார். இது அளந்து போடப்படுவதல்ல அல்லது நமது தகுதிக்கு தக்கதாகவும் அல்ல. மாறாக, அது எல்லையற்றது மற்றும் அளவிட முடியாதது.

நாம் அவருக்கு விரோதமாக முரட்டாட்டம் செய்தபோதும், தேவன் தம்முடைய குமாரனாகிய இயேசுவை நமக்காக மரிக்க அனுப்பியதன் மூலம் நம்மீதான தம்முடைய அன்பை வெளிப்படுத்தினார் (வ.8). இயேசுவின் பலியின் காரணமாக, அவரிடமிருந்து பிரிந்திருந்த தனிமையிலிருந்து நாம் இரட்சிக்கப்படுகிறோம், தேவனுடன் நாம் ஒப்புரவாக்கப்படுகிறோம். அவர் அவருடைய அன்பை நமக்குள் ஊற்ற, அது அன்பின் ஊற்றாக மாறும் (வ.10) . நீங்கள் அன்பிற்காகத் தாகமாக இருந்தால், தேவனிடம் செல்லுங்கள். அவரே அன்பு.

தேவன் மட்டுமே திருப்தியாக்குவார்

பெரிய இறால், ஷவர்மா, சாலடுகள் மற்றும் ஆயிரக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள பல உணவு வகைகள் அந்த வீட்டு உரிமையாளரிடம் வழங்கப்பட்டது. ஆனால் அவர் விருந்து வைக்கவில்லை. உண்மையில், அவர் அந்த வகையறாவான உணவை வாங்கவுமில்லை; அவரது ஆறு வயது மகன் செய்தான். இது எப்படி நடந்தது? தந்தை தூங்குவதற்கு முன் தனது மகனை தனது அலைபேசியில் விளையாட அனுமதித்தார், அவனோ பல உணவகங்களில் இருந்து விலையுயர்ந்த உணவுகளை தாராளமாக வாங்க அதைப் பயன்படுத்தினான். “ஏன் இப்படி செய்தாய்?” என தந்தை, போா்வைக்குப் பின் மறைந்திருந்த மகனிடம் கேட்டார். ஆறு வயது சிறுவன், “எனக்கு பசித்தது” என்றான். சிறுவனின் பசியும், முதிர்ச்சியின்மையும் அதிக விலைக்கிரயம் செலுத்த வழிவகுத்தது.

ஏசாவின் பசியும் அவருக்கு ஆயிரக்கணக்கான ரூபாய்களை விட அதிக நஷ்டத்தை அளித்தது. ஆதியாகமம் 25ல் உள்ள கதை, அவர் சோர்வடைந்து உணவுக்காக ஏங்குவதை காட்டுகிறது. அவர் தன் சகோதரனிடம், “அந்தச் சிவப்பான கூழிலே நான் சாப்பிடக் கொஞ்சம் தா, இளைத்திருக்கிறேன்” (வ.30) என்றான். அதற்கு யாக்கோபு ஏசாவின் சேஷ்ட புத்திரபாகத்தை கேட்டார் (வ.31). அந்த பிறப்புரிமையில், முதற்பேறான ஏசாவின் அதிகாரம், தேவனின் வாக்குதத்தங்களின் ஆசீர்வாதம், சொத்தில் இருமடங்கு பங்கு மற்றும் குடும்பத்தின் ஆவிக்குரிய தலைவராக இருக்கும் பாக்கியம் ஆகியவை அடங்கும். தன் பசிக்கு தானே பலியான ஏசா, “புசித்துக் குடித்து” மற்றும் “தன் சேஷ்ட புத்திரபாகத்தை அலட்சியம்பண்ணினான்” (வ. 34).

நாம் சோதிக்கப்பட்டு, எதையாவது விரும்பும்போது நமது பசி நம்மைக் கொடிய தவறுகளுக்கும் பாவங்களுக்கும் இட்டுச் செல்ல விடாமல், பசியுள்ள ஆத்துமாவை “நன்மைகளால்” (சங்கீதம் 107:9) திருப்திப்படுத்துகிற பரலோகத் தகப்பனை மட்டும் அணுகுவோம்.

நெருக்கத்தின் குரல்

நிலநடுக்கத்தால் இடிந்து விழுந்த இடிபாடுகளின் இரண்டு தளங்களுக்கு அடியில் சிக்கியிருந்த சிரியா நாட்டுச் சிறுமியான ஐந்து வயது ஜினான், தனது சிறிய சகோதரனைச் சுற்றியுள்ள இடிபாடுகளில் இருந்து காப்பாற்றியபோது மீட்புப் பணியாளர்களை அழைத்தார். “என்னை இங்கிருந்து வெளியே கூட்டிச்செல்லுங்கள்; நான் உங்களுக்காக எதையும் செய்வேன், நான் உங்கள் வேலைக்காரியாகவும் இருப்பேன்” என்று அவள் நொறுங்கிய உள்ளத்தோடு அழைத்தாள்.

நெருக்கத்திலிருந்து அழைப்பது என்பது சங்கீதம் முழுதும் உள்ளது, “நெருக்கத்திலிருந்து கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டேன், கர்த்தர் என்னைக் கேட்டருளி விசாலத்திலே வைத்தார்” (118:5). பூகம்பத்தால் இடிந்து விழுந்த கட்டிடங்களின் எடையை நாம் அனுபவிக்கவில்லை என்றாலும், சவாலான உடல்நிலை, பொருளாதாரக் கஷ்டம், எதிர்காலத்தைப் பற்றிய நிச்சயமற்ற தன்மை அல்லது உறவுமுறை இழப்பு போன்றவற்றின் நெருக்குதலை நாம் அனைவரும் அனுபவிக்கிறோம்.

அந்த தருணங்களில் நாம் விடுதலைக்காக தேவனிடம் பேரம் பேசலாம். ஆனால் உதவிக்காக தேவனை வற்புறுத்த வேண்டியதில்லை. அவர் பதிலளிப்பதாக உறுதியளிக்கிறார், அது நமது சூழ்நிலையிலிருந்து விடுவிக்கவில்லை என்றாலும், அவர் நம்முடனும் நம் அருகிலும் இருப்பார். மரணம் உட்பட வேறு எந்த ஆபத்துக்கும் நாம் பயப்படத் தேவையில்லை. சங்கீதக்காரனோடு நாமும், “எனக்கு அநுகூலம் பண்ணுகிறவர்கள் நடுவில் கர்த்தர் என் பட்சத்தில் இருக்கிறார்; என் சத்துருக்களில் சரிக்கட்டுதலைக் காண்பேன்” (வ.7) எனலாம்.

ஜினானும் அவளது தம்பியும் பெற்றுக்கொண்டதை போல வியத்தகு மீட்பு நமக்கு வாக்களிக்கப்படவில்லை, ஆனால் சங்கீதக்காரனை “விசாலத்திலே” (வ. 5) கொண்டு வந்த நமது உண்மையுள்ள தேவனை நாம் நம்பலாம். அவர் நம் நிலைமையை அறிந்திருக்கிறார், மரணத்திலும் அவர் நம்மை கைவிடமாட்டார்.